உழைப்பின் பலன்
"டேய், பீட்சா வாங்கித் தாடா... சாப்பிடணும் போல இருக்கு! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன்," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி.
அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார். கையில் ஒரு சோடா பாட்டிலுடன், கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய, இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான்.
அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள். "உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி... ஏன் என் உசுரை வாங்குற?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான். ஆனால், ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது.
"அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா…" என்றாள் காதலுடன்.
"கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும். உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்டுப் பாவத்தைச் சம்பாதிச்சா எப்படி ருசிக்கும்?" என்றான் குமார் கொஞ்சம் ஏளனமாக.
ஒரு லாரி அரிசி மூடைகளை இறக்கி முடித்தால் ₹900 கிடைக்கும். உழைப்பாளியான குமார் தினமும் இரண்டு லாரிகளுக்குச் செல்வான். உழைக்கும் வயதும் கூட! நாளொன்றுக்கு ₹1800 சம்பாதிப்பான்.
கஞ்சன், தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டான்! அவன் லட்சியம் ஒரு பெரிய வீடு வாங்க வேண்டும் என்பதுதான். அவனென்று சொல்லிக் கொள்ள வேறு யாரும் கிடையாது. அவன் மாமா ராமன் தான் அவனை பி.காம் (B.Com PA) வரை படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மாதம் பத்தாயிரம் கிடைக்கும் ஆபீஸ் வேலையில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
ஐம்பது லட்சம் சேர்க்க வேண்டும் என்று உழைக்கத் தொடங்கினான். ஐந்து வருடங்கள் கணக்கு வைத்திருந்தான். அரிசி மூட்டை இறக்குவதில் மட்டுமே மாதத்திற்கு ₹54,000 கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை லாரி வண்டி கிடையாது என்பதால், அன்று பேருந்துகளில் கொய்யா, வெள்ளரி என்று வியாபாரம் செய்யச் சென்றுவிடுவான்.
பார்க்கக் கம்பீரமாக, கோதுமை நிறமும் சுருட்டை முடியும் கொண்ட அழகான வாலிபன். எப்போதும் அரைக்கைச் சட்டை அணிந்திருப்பான்; அதுவே அவனை இன்னமும் கம்பீரமாகக் காட்டும். சிறியதாக முறுக்கிய மீசை அந்த இருபத்தி மூன்று வயதிற்கே உரிய கலை!
அவனது சிரிப்பிற்கே வியாபாரம் இயல்பாக நடக்கும். விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தில், அன்றைய ஒரு நாளில் மட்டுமே குறைந்தபட்சம் இரண்டாயிரம் முதல் அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுவான்.
படித்து முடித்ததில் இருந்து நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து இதையே செய்து வந்தான். சில நாட்கள் லோடு இறக்கிய பின்பு, இரவு பதினொரு மணி வரை ரயில் நிலையங்களில் பெரிய லோடுகள் இறக்கச் செல்வான். அங்கு அந்த இரண்டு மணிநேரத்தில் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கிடைத்துவிடும்.
"இந்த வயதில் தான் உழைக்க முடியும்" என்று அவன் நன்கு அறிந்திருந்தான். 'இவ்வளவு சம்பாதித்தும் காதலியுடன் ஒரு நாள் வெளியில் சந்தோஷமாகச் செல்லாமல் என்ன மனிதன் இவன்?' என்று அவனைச் சுற்றியுள்ளவர்கள் நினைக்கும் அளவே நடந்துகொள்வான்.
ரோகிணி, "சரி, உன்னோட காசு வேண்டாம். என்கிட்ட காசு இருக்கு, நான் வாங்கித் தர்றேன். நீ வாடா... உன்னைப் பாக்கணும் போல இருக்கு," என்றாள்.
பாதி குடித்து முடித்திருந்த சோடாவைக் கடையின் டேபிளில் வைத்துவிட்டு, மூட்டை சுமந்தபடியே, "அந்தப் பாவம் சம்பாதிச்ச காசா? வேணவே வேணாம்! சரி, நீ ஆசைப்படுற இல்ல... சாயங்காலம் போல நான் வர்றேன். நானே உன்னைக் கூப்பிடலாம்னுதான் நினைச்சேன்," என்றான் குமார்.
ரோகிணிக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவளை அவன் வெளியே அழைத்துச் சென்றதே இல்லை. வாரம் ஒருமுறை சந்திப்பான், ஏதேனும் வாங்கிச் செல்வான்; ஆனால் உணவகங்களிலோ, ஆடம்பர இடங்களிலோ விருந்துகள் எதுவும் இருக்காது. காக்கைக்கூட்டத்தில் தனியாகத் தெரியும் இருவரைப் போல, அந்தப் பூங்காதான் நான்கு ஆண்டுகளாக அவர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது.
"ரோகிணி, என்னடா உண்மையாவா சொல்ற? என்னால நம்பவே முடியல!" என்றாள் பூரிப்புடன்.
சாயங்காலச் சூரியன் மெல்ல மறையத் தொடங்கி, வானம் ஆரஞ்சு நிறப் பிழம்பாக மாறியிருந்தது. அந்தப் பூங்காவில் வழக்கமாகச் சந்திக்கும் மரத்தடிப் பெஞ்சில் ரோகிணி காத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், குமார் கை கால்களை அலம்பி, அழுக்குச் சட்டையை மாற்றிவிட்டுப் புதிய மனிதனாக கம்பீர நடைபோட்டு அவள் முன்னால் வந்து நின்றான்.
ரோகிணியின் முகத்தில் பேரானந்தம். "என்னடா குமார், உண்மையாவே நாம வெளிய போறோமா? நாலு வருஷத்துல இப்படி நீயே கூப்பிட்டதே இல்ல!" என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
குமார் அவள் அருகில் அமர்ந்து, ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். அவனது கரங்களில் இருந்த தழும்புகளும் காய்ப்புகளும் அவனது உழைப்பின் சாட்சியாக இருந்தன.
"ரோகிணி... நான் அஞ்சு வருஷத்துல ஐம்பது லட்சம் சேர்க்கணும்னு கணக்குப் போட்டிருந்தேன். ஆனா, ராப்பகலா உடம்பை முறிச்சு உழைச்சதுல, மூணே வருஷத்துல 52 லட்சம் சம்பாதிச்சுட்டேன்டி!" என்று ஆனந்தக் கண்ணீரும் பெருமிதமுமாகச் சொன்னான்.
ரோகிணி அதிர்ச்சியிலும் வியப்பிலும் வாயடைத்துப் போனாள். "என்னடா சொல்ற? 52 லட்சமா?!"
"ஆமாடி! என்னோட எதிர்காலத் திட்டம் எல்லாம் தெளிவா இருக்கு. 40 லட்சத்துல இடம் வாங்கி, வீடு கட்டி, உள் அலங்கார வேலை (Interior Work) வரைக்கும் எல்லாத்தையும் முடிச்சிடுவேன். மீதி இருக்குற 10 லட்சத்தை உன்னோட பேர்ல 'ஃபிக்ஸட் டெபாசிட்' (Fixed Deposit) பண்ணிடுவேன். இன்னும் ஒரே ஒரு வருஷம் மட்டும் நான் இந்த மூட்டை தூக்குற வேலையைச் செய்வேன். அதுக்குள்ள வீட்டு வேலையும் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் தான்!"
ரோகிணி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள். ஆனால், குமாரின் முகம் அடுத்த கணமே சற்றே தீவிரமானது.
"ஆனா ஒரு விஷயம் ரோகிணி... நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பன்கிட்ட பெண் கேட்க மாட்டேன்," என்றான் உறுதியான குரலில்.
ரோகிணியின் முகம் சுருங்கியது. குமாரின் நினைவுகள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பின்னோக்கிச் சென்றன.
அன்று ரோகிணியின் தந்தை தனசேகர், வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கும் அகந்தை நிறைந்த மனிதர். குமார் அவரிடம் தன் காதலைச் சொன்னபோது, "மூட்டை தூக்குற பயலுக்கு என் பொண்ணைக் கேக்குறியா? ஓட்டைச் சல்லி இல்லாத பரதேசி!" என்று கௌரவக் குறைச்சலாகப் பேசி, சுற்றியிருந்தவர்கள் முன்னிலையில் அவனை மிகக் கேவலமாக அவமானப்படுத்தித் துரத்தியிருந்தார். அந்த அவமானம் குமாரின் நெஞ்சில் ஆறாத வடுவாக இருந்தது.
அந்த நினைவை அடக்கியபடி குமார் தொடர்ந்தான், "உனக்கு என்னைக்காவது என் மேல நம்பிக்கை வந்து, என்னைக் கட்டிக்க விருப்பம் இருந்தா, உங்க அப்பனை என் வீட்டுக்கு அனுப்பி வை. அவர் வந்து 'என் மகளை உனக்குத் தர்றேன்'னு சொல்லட்டும். அப்படி இல்லையா... நீயாகவே தனியா என் கூட வரத் தயாரா இருந்தாலும் சரி, நான் உன்னை நல்லபடியா பார்த்துப்பேன்."
ரோகிணி என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. குமாரின் திட்டப்படி புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.
திடீரென ஒரு நாள், ரோகிணியின் தந்தை தனசேகருக்குக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுப் படுக்கையில் விழுந்ததாகக் குமாருக்குச் செய்தி வந்தது. வட்டி வாங்கும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் கொடுத்தவர்கள் கைவிரித்தது, அத்துடன் பக்கவாத நோய் என அவர் நிலைகுலைந்து போயிருந்தார்.
அவரைப் போய் பார்ப்பதா வேண்டாமா என்று குமார் யோசித்தான். ஆனால், 'ஒரு மனிதன் கஷ்டப்படும்போது, அதுவும் காதலியின் தந்தை என்ற நிலையில் அவரைச் சந்திக்காமல் இருப்பது சரியில்லை' என அவனது மனசாட்சி சொல்லவே, அவர் வீட்டிற்குச் சென்றான்.
கம்பீரமாக வலம் வந்த தனசேகர், இன்று கட்டிலில் சுருங்கிப் போய் முடங்கிக் கிடந்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டுப் பார்த்தவர், வாசலில் கம்பீரமாக நின்ற குமாரைக் கண்டதும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
"குமார்... என்னை மன்னிச்சிடுப்பா! நான் வட்டிக்கு விட்டுச் சம்பாதிச்சதெல்லாம் பாவம்டா... அந்தப் பாவம் தான் இன்னைக்கு என்னை இந்த நிலைமையில நிறுத்தியிருக்கு. என் பொண்ணை நீதான் நல்லபடியா பார்த்துக்கணும்," என்று விம்மியபடி அழுதார்.
அவரது நிலைமையைக் கண்டு குமாரின் கோபம் எல்லாம் பனியென விலகியது. "அதைப்பத்தி இப்ப யோசிக்காதீங்க ஐயா, எல்லாம் சரியாயிடும்," என்று ஆறுதல் கூறினான்.
அப்போது, தனசேகருக்குப் பயந்து வட்டி கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் சிலர் வெளியே நின்று கொண்டிருந்தனர். குமார் வெளியே வந்து அவர்களிடம் பேசினான்.
அவன் ஒரு சிறந்த யோசனையை முன்வைத்தான்: "பெரியவர்களே! இனிமேல் யாரும் இவருக்கு வட்டி கட்ட வேண்டாம். நீங்கள் வாங்கிய அசல் தொகையை (முதலை) மட்டும் சிறுகச் சிறுகத் திருப்புங்கள். வாரம் வாரம் உங்களால் முடிந்த தொகையைக் கொடுங்கள், அதில் முதலைக் கழித்துக் கொள்ளலாம்."
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஊர் மக்கள் பெரு நிம்மதி அடைந்தனர். "தம்பி, நீ வாழ்கப்பா! உன்னால் தான் எங்களுக்குப் பெரிய பாரம் இறங்கியது," என்று குமாரை மனதார வாழ்த்திச் சென்றனர்.
மக்களின் வாழ்த்துகளும், குமாரின் அன்பான அரவணைப்பும், ரோகிணியின் கவனிப்பும் தனசேகருக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தன. மன உளைச்சல் நீங்கியதால், அவர் கொஞ்ச கொஞ்சமாக நோயின் பிடியில் இருந்து மீண்டு வரத் தொடங்கினார்.
சில மாதங்களுக்குப் பிறகு...
குமார் திட்டமிட்டபடியே தனது கனவு வீட்டைக் கட்டி முடித்தான். தனசேகர் பூரண குணமடைந்து, தாமாகவே முன்வந்து குமாரின் கைப்பிடித்து, "என் மகளை உனக்குத் தர்றதுல எனக்குப் பெருமைப்பா" என்று கூறித் திருமணத்தை நடத்தி வைத்தார்.
B.Com PA படித்த குமார், மூட்டை தூக்கும் வேலையை நிறுத்திவிட்டு, தன் உழைப்பால் சேர்த்த அனுபவத்தையும் பணத்தையும் கொண்டு ஒரு சொந்தத் தொழிலைத் தொடங்கினான். அரிசி மூட்டை தூக்கிய அதே வேளச்சேரி பகுதியில், ஒரு பெரிய 'இயற்கை தானிய மற்றும் அரிசி மொத்த வியாபாரக் கிடங்கை' (Organic Wholesale Grain Business) தொடங்கினான்.
அவனது நேர்மையும், கடின உழைப்பும், சரியான திட்டமிடலும் அவனது தொழிலைப் பெரும் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. ஒரு காலத்தில் மூட்டை தூக்கிய குமார், இன்று பல நூறு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் தரும் முதலாளியாக, ரோகிணியுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்!
Comments
Post a Comment
நன்றி