ஒரு இனத்தின் பெயர் பின்னாளில் சாதிகள் என்று பிரிக்கப் படுகிறது. அப்படி நான் சிறுவயதில் கேள்விப் பட்ட ஒரு இனம் இந்த குழுவ இனம்.
இவர்களை தனியாக வரையறுக்க வேண்டுமென்றால் இவர்கள் தினமும் குளிப்பது இல்லை, குளத்து மீன், ஆமை, பாம்பு இவைகள் இவர்களுடைய பெரும்பாலான உணவு பழக்கம். பாம்புகளின் நெய் இவர்களிடம் எப்போதும் இருக்கும் என்பார்கள். இதனை கடந்து தொழில் அந்த காலத்தில் மிதிவண்டியில் ஐஸ் விற்க செல்வதும். திருமண வீடுகளில் எச்சி இலைகளை அப்புறப் படுத்துவதும் மேசையை துடைப்பதும் போன்ற வேலைகளை செய்தார்கள்.
ஆற்றங்கரையில் பட்டா இல்லா நிலத்தில் தங்கள் குடிசைகளை அமைத்து இருந்தனர். அவர்கள் குடியிருந்த ஆற்றங்கரை கடந்ததும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதில் தான் அவர்கள் பிள்ளைகளை ஆசிரியரின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு தான் நானும் படித்தேன் என்னுடன் இருவர் பயின்றனர் இருவரும் எனக்கு நண்பர்கள் தான். பள்ளிக்கு அணிந்து வரும் சீருடை அவர்கள் துவைத்து உடுத்துவது மிகவும் குறைவு ஆனால் அவர்களிடமிருந்து வியர்வை நாற்றமோ வேறு ஏதேனும் அசவுகரியமாக தோன்றியது இல்லை. ஆனால் சில வேலைகளில் கொஞ்சம் பயமாக இருக்கும்.
காதில் பாம்பு சட்டையை மடித்து வைத்திருப்பான். கொஞ்சம் உயரம் அதிகமானவன் என்னை விட சிங்கப்பல் ஒன்று உண்டு இடது புறம் அப்படியே இடது காதில் பாம்பு சட்டை ஈ என்று சிரித்துக் கொண்டே நிற்பான், மலைபாம்பு நெய் ஒன்று ஒரு நாள் ஒரு சிறிய டப்பாவில் எடுத்து வந்தான் இதை குடித்தால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் மூச்சு வாங்காது. போலீஸ் துரத்தினாலும் நம்மை பிடிக்க முடியாது என்று கூறினான் அதற்கு அவன் யாரிடமும் விலை கேட்கவில்லை.
ஆனால் என்னுடன் இருந்த பலருக்கு அதை வாங்கி குடித்தால் நன்றாக ஓடலாம் என்ற ஆசை இருந்தது ஆனால் இந்த டப்பாவை திரந்ததும் அதிலிருந்து வந்த ஒரு வித வாடை யாருக்கும் உகந்ததாக இல்லை என்பதனால் அதை யாரும் வாங்கி அருந்தவில்லை.
பாம்பை பிடித்து வயற்றைக் கிழித்து நெய்யை எடுத்து விட்டு மீண்டும் தைத்து அதனை விட்டு விடுவோம் என்றான். மலை பாம்பு நெய் வாங்கி குடித்து போலீசிடம் இருந்து தப்பிக்கலாம் என்று அவன் கூறும் போது யாருக்கும் நம்மளை ஏன் போலீஸ் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுவயதில் வராமல் தான் இருந்தது.
அவர்கள் யாரும் எட்டாவது வகுப்பு பின் அவர்கள் படிப்பை தொடரவில்லை ஆனால் கோவில் திருவிழாவின் போது ஐஸ் விற்க வருவார்கள். எங்களுக்கு மலிவு விலையில் தரப்படும். நண்பர்கள் என்ற பாஸ் மூலம். இன்றும் அவர்கள் அதே குடிசையில் தான் இருக்கிறார்கள். பக்கத்து ஊரில் அரசு காலனியில் வீடு கொடுக்கப் பட்டுள்ளது இருந்த போதும் அவர்கள் குடிசைகளிலே வாழ்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் பண்ணி வளர்க்கிறார்கள் திருமண வீடுகளில் எச்சி இலைகளை வீட்டுக் காரர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முன்பு கார்த்திகை பொங்கல் போன்ற நாட்களுக்கு வீடு வீடாக வருவார்கள் கொழுக்கட்டை பொங்கல் அனைத்து வீடுகளிலும் கொடுக்கப் படும்.
இப்போது யாரும் உணவிற்கு கையேந்தாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர் உலக மாற்றம் அவர்களுக்கு சிறிது உளவியல் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
0 Comments
நன்றி